மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, 2026ல் பயன்பாட்டுக்கு வரும் என, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த, தர்மபுரி வடக்கு ஒன்றிய பா.ஜ., மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தை செயல்படுத்த, கடந்தாண்டு மட்டும், 58 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தில், மாவட்டத்தில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

தமிழகத்துக்கு தேசிய சுகாதார திட்டத்துக்காக, 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சுகாதார துறையில் பல்வேறு திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த, தமிழக அரசுக்கு மத்திய அரசு, 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், அத்திட்டங்களில் பிரதமர் மோடியின் படம், இந்திய அரசின் சின்னங்களை தமிழக அரசு வெளியிடவில்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு இதற்கான நிதியை மறு மதிப்பீடு செய்து, 1,977 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள், 2026க்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை, ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.