சிவகாசி மாநகராட்சியின் அதிகாரிகளின் வாகனம் பழுது ஏற்படுவதால், வண்டியை தள்ளிவிட்டு இயக்க வேண்டிய அவலம் இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. நிர்வாக வசதிகளுக்காக சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருத்தங்கல் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் அதிகாரிகள் பயன்படுத்தும் ஜீப் வாகனம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எங்காவது செல்ல வேண்டும் என்றால், இந்த வண்டியை நான்கு பேர் சேர்ந்து தள்ளிவிட்டு இயக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது.
மேலும் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்களும் மோசமான நிலையில் உள்ளது என்று ஊழியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள், மாநகராட்சியின் வாகனங்களை பழுது நீக்கி நல்ல நிலையில் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.