பழனி முருகன்கோவிலில் முறைகேடாக செய்யப்பட்ட உத்ஸவர் சிலையை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் கட்டணம் இல்லாமல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழனியில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் மலைக்கோவில் தமிழகத்தின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்று. இந்தியாவில் அதிக வருமானம் வரக் கூடிய கோவில்களில் இரண்டவது இடத்திலும் தமிழகத்தில் முதல் இடத்திலும் உள்ள இக்கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மலைக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான நிலையில் இதுவரை கும்பாபிஷேகம் செய்வதற்கான பேச்சுவார்த்தை கூட நடத்தப் படவில்லை.
இதனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது:- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அறநிலையத் துறையும் தொல்லியல் துறையும் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
ஆகம விதிப்படி உடனடியாக கும்பாபிஷேகம் நடத்தப் பட வேண்டும் என்றும், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ஐம்பொன் சிலை மோசடியில் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது கண்டனத்திற்கு உரியது என்றும், சிலையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல், நீதி மன்றம் சிறப்பு குழு அமைத்து சிலை இருக்கும் இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்றும் கூறினர்
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பக்தர்கள் குளித்து மலைக்கோவிலுக்கு சென்று வர வையாபுரி மன்னனால் வெட்டப்பட்ட புனிதமான வையாபுரி குளம், தற்போது பழனி நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் சக்கடைகளும் கலக்கும் இடமாக மாறியுள்ளதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேட்டி இங்கே…