தான் காதலித்த பெண்ணை மணமுடிக்க பெற்றோர் அனுமதிக்காமல் முரண்டு பிடித்ததால், காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நக்கலப்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவர், பழனி பட்டாலியனில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். சதீஷ் அங்குள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரது காதலை பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர்.
அந்தப் பெண்ணை திருமணம் செய்யவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனராம்.
இந்நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர் மீண்டும் பெற்றோரிடம் தன் காதலியை திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த சதீஷ், தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.