பிப்ரவரி 14ஆம் தேதியில் காதலர் தினம் என்று கொண்டாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் கழுதைக்கும் பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கழுதைக் கல்யாண நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையிலும், தேனி நகரத் தலைவர் வெங்கலப் பாண்டி முன்னிலையிலும் திருமண ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இதற்காக கழுதைகளைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து, மாலை அணிவித்து கழுதையின் உரிமையாளர் அவற்றை மேடையில் கொண்டு வந்து நிறுத்தினார். தேனி ஒன்றியத் தலைவர் குரு.அய்யப்பன் அர்ச்சகர் வேடமணிந்து தட்டு பழத்துடன் வந்திருந்தார்!
இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் சொல்லச் சொல்ல, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நம் பாரதப் பண்பாடு புனிதம் காக்கப்பட வேண்டும்; அன்னிய மோகம் பாரத தேசத்தை விட்டு அகல வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, இந்து எழுச்சி முன்னணியின் தேனி ஒன்றியத் துணைத் தலைவர் கராத்தே நாட்ராயன் கழுதை பகவானை வேண்டி தாலி கட்டினார்! கழுதைகளுக்கு வந்திருந்த பெரியோர்கள் அனைவரும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் பொது இடங்களில் அத்துமீறும் காதல் ஜோடிகளைப் பிடித்து காவல்துறை வசம் ஒப்படைக்க செந்தில்குமார் தலைமையில் வெங்கலப் பாண்டி நகரப் பொதுச் செயலாளர் செல்வப் பாண்டியன் நகரப் பொருளாளர் ராஜேஸ் நகரச் செயலாளர்கள் கருப்பு, வீரமணி, டெய்லர் ரத்தினம், சிவராம் நகரப் பொறுப்பாளர்கள் கலைச்செல்வம் இராம்குமார் மற்றும் உள்ள மாவட்ட ஒன்றிய நகரப் பொறுப்பாளர்கள் தேனி மாவட்டத்தில் மக்கள் கூடும் ஆண்டிபட்டி வைகை அணை மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களை பார்வையிட்டார்கள்
பொறுப்பாளர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்பே காதல் ஜோடிகளை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து விட்டனர். இதனால் பொறுப்பாளர்கள் கண்ணில் காதல் ஜோடிகள் தென்படவில்லை!