மதுரை: வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் இருப்பதை நீக்குவதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக டிஜிபி, உள்துறை செயலர் ஆகியோரை தாங்களாக முன்வந்து இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்ப்பதாக உத்தரவிட்டனர்.
மேலும், வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை நீக்குவதற்கு எடுக்கபட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.