நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு 37 கிராம் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் இருவரை கைது செய்துள்ளது காவல் துறை.
நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணி புரத்தில் 70 வயதைக் கடந்த முதிய தம்பதி சண்முகவேல், செந்தாமரை தம்பதி தங்கள் தோட்டத்தில் எலுமிச்சை மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக இதழ் ஒன்றில் பேட்டி வெளியானது. இதை அடுத்து, அவர்களிடம் பணம் நிறைய இருக்கும் என்ற எண்ணத்தில் கொள்ளையர் இருவர் அரிவாளால் வெட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் வந்தனர்.
ஆனால், அந்தத் தம்பதி தீரத்துடன் போராடி, கொள்ளையர்களை விரட்டியடித்தனர். அரிவாளைக் கண்டும் பயம் கொள்ளாமல் அவர்கள் போராடியது கண்டு, சூட்டோடு சூடாக மறு நாளே அவர்களுக்கு தமிழக அரசு விருது கொடுத்துவிட்டது. இவர்களது செய்தி நாடு முழுதும் வீடியோவாக பரபரப்பாகப் பேசப் பட்டு, பாராட்டு பெற்றுவிட்டது.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று இருவரை காவல் துறை கைது செய்துள்ளது.
அதே நேரம், சந்தேகத்திற்கு இடமாக பலரை விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.