டிஜிட்டல் பேனர்கள் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் பேனர்கள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூறியது.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக., பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காகக் கட்டப் பட்டிருந்த பேனர் சாலையில் விழுந்து, அதனால் நிலை தடுமாறிக் கீழே விழுந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி ஏறியது. இந்த விபத்தில், சுபஸ்ரீ உயிரிழந்த சோகம் இன்னமும் மக்கள் மனத்தை விட்டு அகலாத நிலையில், நீதிமன்றம் மேலும் கடுமை காட்டியது.
அரசியல் கட்சியினர் தங்கள் தொண்டர்களுக்கு கட்டளை இட வேண்டும் என்றும், பேனர்கள் பிள்க்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக., தலைவர் ஸ்டாலின், பாமக., நிறுவுனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டனர்.
இந்த நிலையில், பல்வேறு இடங்களில் கட்சியினர் தாமாகவே முன்வந்து தாங்கள் வைத்த பேனர்களை அகற்றி வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் போர்டுகளை அதிமுக.,வினர் இரவோடு இரவாக அகற்றினர்.
இது போல் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர்களை அரசியல் கட்சியினர் அகற்றினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில், கோயில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.