தென்காசி புதிய மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி வரும் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைக்கிறார். இதை அடுத்து விழா நடக்கும் இடத்தை நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டார்.
தென்காசி புதிய மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 22ஆம் தேதி வெள்ளி அன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா நடக்கும் இடத்தை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டார்.
தென்காசி புதிய மாவட்டம் :நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 18இல் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட வரையறை குறித்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திலும், குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 வருவாய் கோட்ட அதிகாரி (ஆர்.டி.ஓ) அலுவலகங்களும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்களும், கிராமங்கள் பலவும் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
தென்காசி மாவட்ட முதல் ஆட்சியராக அருண்சுந்தர் தயாளனும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா தென்காசியில் வரும் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தென்காசியில் புதிய மாவட்ட தொடக்க விழா நடைபெறும் இடத்தை ஆட்சியர் ஷில்பா, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 21ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். 22ஆம் தேதி காலை தூத்துக்குடியில் இருந்து காரில் தென்காசிக்கு வந்து, புதிய மாவட்ட தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.
விழாவில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது. மேலும் நெல்லை மாவட்டத்தில் நடந்து முடிந்த வளர்ச்சிப் பணிகளை திறந்து வைக்கிறார்.
சுரண்டை அரசு கல்லூரிக்கு ரூ.2 கோடி செலவிலும், பாவூர்சத்திரம் ஔவையார் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.3½ கோடி செலவிலும், ஆவுடையானூர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2¼ கோடி செலவிலும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அவர் திறந்து வைக்கிறார்.