மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து பாபநாசம் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடித்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளவு கொண்ட பாபாநசம் அணை தனது முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக 2500 கன அடி முதல் 3 ஆயிரம் கன அடித்தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்ததைத் தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 13,340 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 4 மணி நிலவரப்படி அணையில் இருந்து விநாடிக்கு 11, 050 கன அடித்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அகஸ்தியர் அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டதிலும் பல்வேறு பகுதிகளில் விடிவிடிய மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணை அதன் முழு கொள்ளவை எட்டியதால் அணையிலிருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்படுகிறது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளவான 142 அடியை எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 14,000கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வெளியேற்றப்படும் தண்ணீர் செல்லும் ஆறு, குளம், வாய்க்கால்கள் உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும். எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் செல்லுமாறும், ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தகவல் மற்றும் உதவி தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணாண 1077, மற்றும் 2501070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-11-2019)
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 142.60 அடி
நீர் வரத்து : 14,204 கன அடி
வெளியேற்றம் : 14,270கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 147.37 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 84.80 அடி
நீர் வரத்து : 3989 கனஅடி
வெளியேற்றம் : 35
நெல்லை மாவட்ட மழை அளவு:
பாபநாசம்: 110 மி.மீ
சேர்வலாறு: 72 மி.மீ
மணிமுத்தாறு: 65.40 மி.மீ
நம்பியாறு: 50 மி.மீ
கொடுமுடியாறு: 45 மி.மீ
அம்பாசமுத்திரம்: 41.40 மி.மீ
சேரன்மகாதேவி: 33 மி.மீ
நாங்குநேரி: 35 மி.மீ
பாளையங்கோட்டை: 38.60 மி.மீ
ராதாபுரம்: 78 மி.மீ
நெல்லை: 34 மி.மீ
தென்காசி மாவட்ட மழை அளவு
கடனா: 35 மி.மீ
ராமா நதி: 25 மி.மீ
கருப்பா நதி: 46 மி.மீ
குண்டாறு: 25 மி.மீ
அடவிநயினார்: 70 மி.மீ
ஆய்குடி: 23.40 மி.மீ
சங்கரன்கோவில்: 5 மி.மீ
கருப்பா நதி : 2 மி.மீ
செங்கோட்டை: 16 மி.மீ
சிவகிரி: 19 மி.மீ
தென்காசி: 30.30 மி.மீ