Home உரத்த சிந்தனை நாமார்க்கும் குடியல்லோம்!

நாமார்க்கும் குடியல்லோம்!

திருநெல்வேலி ம.தி.தா. இந்து பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சைவ சபை விழாவில் மாண்புமிகு நீதியரசர் அரங்க.மகாதேவன் அவர்கள் நாமார்க்கும் குடியல்லோம் என்ற தலைப்பில் சிறப்பானதொரு ஆன்மீக உரையாற்றினார்

வரவேற்புரையாற்றிய வழக்கறிஞர் திரு.வள்ளிநாயகம் அவர்கள் கூறும் போது நீதியரசர் அரங்க . மகாதேவன் அவர்கள் ஒரு மிகச் சிறந்த சிவபக்தர் சிவனடியாரை தொட்டால் சிவன் பார்த்து கொள்வான் என்பதை நாம் பார்த்தோம் இதுபற்றிய விவரம் தெரிந்தவர்களுக்கு இது புரியும் என்ற சங்கதியோடு தான் நீதியரசரை அறிமுகம் செய்து வைத்தார் .ஆம் அது உண்மைதான்

நாமார்க்கும் குடியல்லோம் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் திருநாவுக்கரசு பெருமான் அவர்கள்

நீதியரசருடைய பேச்சு திருநாவுக்கரசர் பெருமானுடைய வாழ்க்கை வரலாற்றினை குறிப்பதாகவே அமைந்தது

ஆரம்பமே அசத்தல் இறைவன் சிவபெருமான்
மாணிக்கவாசகருக்கு காலை கொடுத்து ஆட்கொண்டான்
ஞான சம்பந்தப் பெருமானுக்கு பாலைக் கொடுத்து ஆட்கொண்டான்
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஓலை கொடுத்து ஆட்கொண்டான்
திருநாவுக்கரசு பெருமானுக்கு சூலை கொடுத்து ஆட்கொண்டான்

*காலை , பாலை , ஓலை , சூலை* என அருமையாக துவக்கினார்

மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட நாவுக்கரசர் பெருமான் இளம் வயதில் தன் தந்தையை இழக்கிறார் தந்தை இறந்த உடன் அவரது தாயார் உடன்கட்டை ஏறினார் அவரது தமக்கையார் திலகவதியார் க்கு பார்த்த மணமகன் போரிலே வீரமரணம் அடைகிறான் இப்படியாக நாவுக்கரசர் பெருமானுடைய வாழ்க்கை முதல் பகுதியை நீதியரசர் மிக அருமையாக தெளிவாக எடுத்துரைத்தார் இவ்வாறான சூழ்நிலையில் நாவுக்கரசர் பெருமானுக்கு இறைநம்பிக்கை அற்றுப் போய் கொல்லாமை ஆசையின்மை பிறர் துன்பம் போக்குதல் என்னும் கொள்கையோடு வந்த சமண சமயத்திற்கு மதம் மாறுகிறார்

சமண சமயத்தில் மிகுந்த ஆழ்ந்த புலமை கொண்டு தருமசேனர் என்னும் பட்டத்தோடு சமண சமயத்தின் உயர்ந்த தலைமைப்பீடம் ஆகிறார் அப்போது இருந்த பல்லவ ஆட்சியும் பாண்டிய ஆட்சியும் சமண சமயத்தைச் சார்ந்து இருந்தது

ஆனால் நாவுக்கரசர் பெருமான் உடைய தமக்கையார் திலகவதியார் தீவிரமான சிவ பக்தர் தன் தம்பி இப்படி சமண சமயத்திற்கு மாறி விட்டானே என்கின்ற மிகுந்த மன வேதனையோடு வீரட்டானம் என்னும் தலத்துக்குச் சென்று மிகுந்த மன வேதனையோடு பாடுகிறார் இறைவன் நாம் நாவுக்கரசரை சூலை நோய் கொண்டு ஆட்கொள்வேன் என்று திலகவதி யாருக்கு அருள்புரிகிறார் அதுபோலவே நடக்கிறது

60 வயதில் நாவுக்கரசர் பெருமான் சமண சமயத்திலிருந்து சைவத்திற்கு திரும்புகிறார் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சிவாலயங்களில் சிவபெருமானை வழிபட்டு சைவத்தைப் பரப்புகிறார்

பாண்டிய மன்னன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் நம்முடைய சமயத்திலிருந்து பல விஷயங்களை கற்று பெரிய ஆளாக இருந்து இப்போது சைவத்திற்கு சென்று சைவத்தை பரப்புகிறார் என்று மன்னன் அவரை அழைத்து வந்து சமணத்திற்கு வர சொல்லுகிறார் ஆனால் நாவுக்கரசர் பெருமான் முடியாது என்கிறார் நான் அரசன் சொல்கிறேன் என்று மன்னன் சொல்கிறான் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்கிறார்

*இதையெல்லாம் நீதியரசர் சொல்ல சொல்ல நம்முடைய சிந்தனைகள் எல்லாமே ஏதோ நாவுக்கரசர் பெருமான் என்னுடைய வாழ்க்கையோடு பயணிப்பது போலவே இருந்தது*

ஒவ்வொரு தேவார பாடலையும் அச்சரம் பிசகாமல் அருமையான தமிழில் தெளிவாக எடுத்துரைத்தார் பாடல்களின் எண்களைக் கூட ஞாபகம் வைத்து துண்டுச் சீட்டு இல்லாமல் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக கனீர் குரலில் அருமையானதொரு உரையாற்றினார்

அடியார்கள் சிவனைத் தவிர வேறு எவருக்கும் அடிபணிய மாட்டார்கள் அஞ்ச மாட்டார்கள் என்று நீதியரசர் சொல்லும்பொழுது ஒரு சிவனடியார் ஆக நம்முடைய நெஞ்சை நிமிர்த்த தான் செய்கிறது

காரணம் சைவத்தையும் திருமுறையும் மிக நன்கு கற்றுத் தேர்ந்த அரங்க மகாதேவன் அவர்களுடைய பேச்சு ஒரு அடியவருடைய பேச்சாக கம்பீரமாக இருந்தது

பிறமொழி கலப்பில்லாமல் தங்குதடையின்றி தமிழ் சரளமாக விளையாடியது அவர் உரையில்

அவருக்கு அடுத்து உரையாற்றிய சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா அவர்கள் அரங்க மகாதேவன் அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது இவ்வளவு அயராது நீதிப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் திருமுறைகளையும் தேவாரத்தையும் இவ்வளவு தெளிவாக பாடுகிறார் பாடல் எண் குறிப்பிட்டு தெளிவாகச் சொல்லுகிறார் எப்படி இவரால் இவ்வளவு நேரம் ஒதுக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது என்று சொன்னார்.

மகாதேவன் அவர்கள் பேசும் போது சுந்தரம் ஐயா அவர்கள் மனதிலிருந்த அதே எண்ணம்தான் நம் மனதிலும் இருந்தது

சிவனடியாரை யாராவது துன்புறுத்த நினைத்தால் சிவபெருமான் அவர்கள் தலையிலேயே குட்டி இறைவன் தகுந்த பாடம் கற்பிப்பான் என்று நீதியரசர் சொல்லும் போது பல நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் நிரம்பிய அந்த அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது

உண்மையில் அருமையானதொரு ஆன்மீக எழுச்சியுரை ஆம் நிச்சயமாக என்னைப்பொறுத்தவரை எழுச்சியுரை தான்

மேடையில் மட்டுமல்ல நீதி பரிபாலனத்திலும் பல ஆன்மீக மரபுகளை காத்த காத்துக் கொண்டிருக்கிற காக்கப் போகிற மாண்புமிகு அய்யா அரங்க மகாதேவன் அவர்களுக்கு சிவபெருமான் எல்லா அருளும் புரிய பிரார்த்தனைகள்

  • கா குற்றாலநாதன், நெல்லை

1 COMMENT

  1. நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்களின் சொற்பொழிவு மனம் கவரும் வகையில் இருக்கிறது. சிவனருள் மேன்மையை எழுச்சிதரும் முறையில் எடுத்தியம்பியுள்ள அன்னாரது அடித்தளங்களில் அடியேன் திருக்குடந்தை சா வேங்கடராமன் சிரம்வைத்துப் பணிகிறேன்.
    ஒரு முக்கியமான மாறுபாடு அன்னாரது உரையில் நான் கண்டதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் அவர் கவனத்துக்கு எடுத்துச்செல்லுமாறு கோரிக்கையும் தங்கள்முன் வைக்கிறேன்.
    அவரது உரையில் ஒரு பகுதி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
    “பாண்டிய மன்னன் சமணசமயத்தைச் சார்ந்தவன். நம்முடைய சமயத்திலிலிருந்து பல விஷயங்களைக் கற்று பெரிய ஆளாக இருந்து இப்போது சைவ சமயத்திற்குச் சென்று, சைவத்தைப் பரப்புகிறார், என்று மன்னன் அவரை அழைத்துவந்து சமணத்திற்கு வரசொல்கிறார். ஆனால் நாவுக்கரசர் பெருமான் முடியாது என்கிறார். நான் அரசன் சொல்கிறேன் என்று மன்னன் சொல்கிறான். நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம், என்கிறார்.”
    உண்மையில் பாண்டிய மன்னனுக்குப் பதிலளிக்கும் வகையில் அப்பர் ஸ்வாமிகள் இந்தப் பதிகத்தைப் பாடவில்லை.
    தருமசேனர் (அப்பர் ஸ்வாமிகளின் பழைய பெயர்) சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியதை சமணர்கள் காஞ்சி பல்லவ மன்னனிடம் புகார் செய்தனர். அப்போதைய பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் ஆவான்.
    விரையலங்கல் பல்லவனும் அதுகேட்டு வெகுண்டெழுந்து
    புரையுடைய மனத்தினராய்ப் போவதற்கு பொய்ப்பிணி கொண்டு
    உரைசிறந்த சமயத்தை அழித்தொழியப் பெறுவதே
    கரையில் தவத்தீர் இதனுக்கென்செய்வதெனக் கனன்றான்.
    சமணரது அறிவுரைப்படியே அரசன் திரு நாவுக்கரசரைத் தண்டிக்க எண்ணி
    “இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டு விடாதென்பால் கொடுவாரும் எனப் புகன்றான்.”
    அறவழியில் நடவாத மன்னன் என்பதால், அவன் அதிகாரிகளும் பொருளைப் பெற்றுக்கொண்டு கடமை தவறுவர், என்பதை அவன் வாய்ச்சொல்லாலேயே சேக்கிழார் பெருமான் தெரிவிக்கிறார்.
    பல்லவ மன்னர் ஆணைப்படி வந்த அதிகாரிகளிடம் திருநாவுக்கரசர் அருளிய பதிகம்தான் இது.
    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version