எங்க கிராமத்துக்குள்ளாற சர்ச் எல்லாம் கட்டப்படவே கூடாது என்று உறுதியுடன் ஒரு கிராமமே இருந்து தடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வள்ளியூரை அடுத்துள்ளது சிறுமளஞ்சி கிராமம். இந்துக்கள் நிறைந்த கிராமமான இங்கே, பெருமாள் கோவில், சிவன் கோவில், மூங்கிலடி சுவாமி, சாஸ்தா கோயில்கள் என பல உள்ளன. மாநில அளவில் பிரபலமான ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவிலும் இங்குதான் உள்ளது. இங்கே நடைபெறும் கோவில் விழாக்கள், மிகவும் புகழ்பெற்றவை. இந்தக் கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கிராமத்தில் கோயில்கள் நிறைந்த பகுதியில், திடீரென காலி மனை ஒன்றை சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு பெரும் தொகையாகக் கொடுத்து வாங்கியுள்ளனர் சிலர். எதற்காக இந்த இடம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கப் பட்டுள்ளது என்று குழம்பிய ஊர்க்காரர்கள், இது குறித்து விசாரித்த போது தான் இதன் பின்னணி தெரிய வந்துளளது. அந்த இடத்தில், பெரிய சர்ச் ஒன்று கட்டப் படப் போவதாகவும், அதனை வைத்து ஊருக்குள் மதப் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிய வந்த போது, கிராமத்தினர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஊர்ப் பொதுமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த வெளியூர் கிறிஸ்தவ மதமாற்ற கும்பல், அந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச் அல்லது வழிபாட்டுக் கூடம் கட்ட மாட்டோம் என எழுதிக் கொடுக்கச் சொல்லி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்! அதன்படி, அந்த இடத்தை வாங்கியவர்களும் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் 21ஆம் தேதி நேற்று காலை திடீரென வெளியூர்களில் இருந்து வந்த கிறிஸ்தவ மதமாற்று கும்பல், அந்த இடத்தில் திடீர் தேவாலயம் கட்டுவதற்கு வேலையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அறிந்த கிராமத்தினர், கொதிப்படைந்தனர்.
ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர். அவர்களுடன், பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், ஊர் தலைவர் ஏ.சி. தங்க கிருஷ்ணவேல், துணை தலைவர் எஸ்.டி.பன்னீர்செல்வன் மற்றும் மகேஷ்குமார், கண்ணன், இசக்கி என முக்கியப் பிரமுகர்களும் திரண்டதால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் அந்தப் பகுதியில் கூடி, சர்ச் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து வந்த நாங்குநேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் புகார் அளிக்கப்பட்டது.