கோவிலை திற என்று கோஷமிட்டு, ஆலயங்களை திறக்க கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்திய இந்து முன்னணி தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகம் முழுதும் இன்று காலை 10.30க்கு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களின் முன்பு, பக்தர்கள் தரிசனத்துக்கு கோயில்களைத் திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் தோப்புக்கரணம் போடும் போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, பல்வேறு கோயில்கள் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் இன்று காலை 10.30க்கு தென்காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு பிரார்த்தனை மற்றும் தோப்புக்கரணம் போடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை அடுத்து, மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி உட்பட 35 பேர் கைது செய்யப் பட்டனர்.
கோவிலை திற ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் தென்காசி மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் சங்கரன்கோவில் சங்கரநயினார் சுவாமி ஆலயம் முன்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கோவிலைதிற… ஆலயங்களை திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் முன்பு பிரார்த்தனை மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட , 17 பெண்கள் உட்பட 52 பேர் கைது செய்யப் பட்டனர்.