பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து திருடியவர்களை நான்கு நாட்கள் வலைவீசித் தேடி, கைது செய்துள்ளனர் ஆழ்வார்குறிச்சி போலீஸார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சம்பன்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மெயின் ரோட்டிலுள்ள பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் தமிழரசன் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து சில கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்தார். ஏற்கனவே சம்பன்குளத்தில் நாடார் சமூகத்தினர் வழிவழியாக வழிபட்டுக் கொண்டிருந்த கோயில், அவ்வூரில் பெரும்பான்மையினராக உள்ள இஸ்லாமிய அமைப்பினர் சிலரது தூண்டுதலால் மாவட்ட நிர்வாகம் போலீஸாரின் துணையுடன் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவத்தில், பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளிவாசலில் நடந்த உண்டியல் திருட்டு, மேலும் பிரச்னையை பெரிதாக்கும் சூழ்நிலை நிலவியது. பள்ளிவாசல் உண்டியல் திருட்டு என்பதால், போலீஸார் மிக துரிதமாக செயல்பட்டு, தனிக்கவனம் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் ஏட்டுள் ஜிஜி குமார். முஸ்தபா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிந்தாமணியை சேர்ந்த ராமையா மகன் முருகன் (வயது 40) மற்றும் செங்கோட்டையைச் சேர்ந்த செய்யது ஜாவிது மகன் முகமது சலீம் (வயது 26) ஆகிய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர்.
இவர்களுடன் வந்த இன்னொரு குற்றவாளி கஞ்சா மகேஷ் என்பவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளை பிடித்த ஆழ்வார்குறிச்சி காவல் துறையையும் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் தனிப்படையினரையும் அங்குள்ளவர்கள் பாராட்டினர்!