திருநெல்வேலி மாநகரில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
திருநெல்வேலி மாநகரில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று பாதிப்பு எண்ணிக்கை 10 என்று இருந்த நிலையில் இன்று 17 ஆக உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, மும்பை போன்ற இடங்களில் இருந்து அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் இரட்டை இலக்கதத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறை காவலர், தனியார் வங்கி ஊழியர் என்று நேற்று 17 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் புறநகர் பகுதிகளில் 9 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கங்கைகொண்டான் சோதனை சாவடியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நோய் அறிகுறிகளுடன் வருவோரை தனிமைப்படுத்தி வைக்க கங்கைகொண்டான் சிப்காட்டில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.