சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அத்தகைய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, நான்கு பேரின் குடும்பத்துக்கும், தலா 10 லட்சம் ரூபாய் நிதியு தவியை அமைச்சர்கள் ராஜு, ராஜலட்சுமி, ஆட்சியர்கள் ஷில்பா பிரபாகர் சதீஷ், சந்தீப் நந்தூரி ஆகியோர் வழங்கினர்.
இதன் பின்னர் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியபோது….
செக்காரக்குடியில் நான்கு பேர் உயிரிழப்புக்குக் காரணமான வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் எஸ்.ஐ., ரகுகணேஷால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் மகேந்திரன் சம்பவம் விசாரணையில் உள்ளது.
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுாரில் போலீசார் தாக்குதலில் இறந்த, ஆட்டோ டிரைவர் குமரேசன் இறப்பு குறித்தும் விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன், என்னை தொடர்பு படுத்தி வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. அது தவறானது என்றார் கடம்பூர் ராஜூ.