நாங்குநேரியில் டி. எஸ். பி., அலுவலகத்தில் நெல்லைக் காவலன் என்ற புதிய திட்டத்தை மாவட்ட எஸ்பி., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் காவல்துறையைத் தொடர்பு கொண்டு உடனடி உதவி பெற நெல்லைக் காவலன் என்ற பெயரில் புதிதாக இருசக்கர வாகனப் பாதுகாப்பு பணியை நேற்று காலையில் நாங்குநேரி டி. எஸ். பி., அலுவலகத்தில் மாவட்ட எஸ். பி., மணிவண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அளிக்கும் தகவலின்பேரில் இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் இரு சக்கர வாகனங்களின் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க முடியும்.
மாவட்டம் முழுவதிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தலா ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் நாங்குநேரி டி. எஸ். பி., அலுவலக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் துணைக் கோட்ட போலீஸ் அதிகாரிகளிடையே மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் உரையாற்றினார்.
அதில் போலீசார் இந்த கொரானா நெருக்கடியான காலத்தில் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கை, கால்களை கழுவ வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கொரானா பரவலைத் தடுக்க வேண்டும் . போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்களிடம் பணிவோடு கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
போலீஸ் மற்றும் பொதுமக்கள் உறவுகளை மேம்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட எஸ். பி., அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகார் அளிக்க வருவதை தவிர்க்கும் அளவில் புகார்களைப் பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி., க்கள் நாங்குநேரி ஸ்ரீலிசாஸ்பிலாதெரஸ், வள்ளியூர் உதயசூரியன், மற்றும் நாங்குநேரி, வள்ளியூர் போலீஸ் துணைக் கோட்டத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், மற்றும் எஸ். ஐ., உள்பட பலர் பங்கேற்றனர்.