விடிகாலை நேரத்தில் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரே திரண்டுவிட்டனர். அப்படி ஒரு திகில் சம்பவம்தான் நெல்லையில் நடந்துள்ளது!
நெல்லை மாவட்டம், பழையபேட்டை காந்திநகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி செல்வரத்தினம் வழக்கம்போல், காலை செல்வரத்தினம் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார்.
அப்போது வேகமாக ஒரு பல்சர் வண்டி வந்தது. அதில், 3 பேர் இருந்தனர். ஒருவர் பைக் ஓட்டினார். பின்னாடி 2 உட்கார்ந்திருந்தனர். அதில் இருந்து ஒருவர் மட்டும் இறங்கி வந்து, கோலம் போட்டு கொண்டிருந்த செல்வ ரத்தினம் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறிக்க முயன்றார்.
இதனால் செல்வரத்தினம் அதிர்ச்சி அடைந்தாலும், அடுத்த செகண்டே உஷார் ஆனார். தன் நகையை அவரும் கெட்டியாக பிடித்து கொண்டார். கொள்ளையன் 2 பேரும் நகையை பிடிச்சு இழுக்க, அதே நகையை செல்வரத்தினமும் இழுத்து பிடித்து கொண்டு, “திருடன் திருடன்” என சத்தம் போட்டு கத்தினார்.
விடிகாலை நேரம் என்பதால், அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு திரண்டு வந்துவிட்டனர். செல்வரத்தினம் மகன் நடராஜன் வேகமாக ஓடி வருவதை பார்த்த கொள்ளையன், ஓடிப்போய் நின்று கொண்டிருந்த பைக்கில் ஏறி தப்பினார். ஆனால் நடராஜன் அவர்களை விரட்டி கொண்டே ஓடினார்.
இதை பார்த்த கொள்ளையர்கள் கையில் கொண்டு வந்திருந்த அரிவாளை வெட்டுவது போல் மிரட்டி காட்டி நடராஜனையும் கீழே தள்ளி விட்டனர். பிறகு 3 பேருமே பைக்கில் பறந்துவிட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பைக்கில் 3 பேரில் 2 பேர் முகமூடி அணிந்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை.. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்படவும், குற்றவாளிகள் தேடப்பட்டு வருகிறார்கள்.