தமிழக முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித தலைவர் அலுவலகத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ராஜலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கோபால், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முறையாக செல்வோருக்கு இ-பாஸை வேகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு என்று பெருமிதம் கொண்டார்.
தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க முன் வந்தால் நிலத்தின் மதிப்பீட்டில் பாதி மானியமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில், தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை நடத்தப்பட்டு, நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார் முதல்வர்.