கடையநல்லூர்: கடையநல்லூரை அடுத்துள்ள சொக்கம்பட்டி காசிவிசுவநாதர் கோவிலில் திருவாதிரை நட்சத்திர திருவிழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள சொக்கம்பட்டி விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் ஆலயத்தில் வைத்து திருவாதிரை நட்சத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கடந்த வருடத்தைப் போல் இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன.
முரளிசர்மா, ராஜேஷ், முகுந்தன் ஆகியோர் கொண்ட அர்ச்சகர் குழு சொக்கலிங்க விநாயகர் கோவிலில் வைத்து கணபதி ஹோமம் செய்து வைக்க, இந்த விழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு ஹோமம், கும்ப ஆவாஹனம், அபிஷேகம், தீபஆராதனை, சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
பின்னர் ஆருத்ரா குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல், பஞ்சவாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ஆருத்ரா திருவாசகி சிவபிரேமா, செயலாளர் இராம்நாத் (எ)இராமகிருஷ்ணன், துணைச்செயலாளர் பணிநிறைவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள், ஊர்ப் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.