குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் புகழ் பெற்றது.
இந்த தசரா விழாவின் முக்கியமான அம்சமாக, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவர். ஆனால் இந்த வருடம் அந்த நிகழ்வு நடைபெறாமல் போனது.
குலசை கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ஆம் திருநாளான நேற்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் முன்பு சென்றடைந்தார். தொடர்ந்து அங்கு ஆணவமே உருவான மகிஷாசுரன் 3 முறை அம்மனை சுற்றி வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார்.
பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் ஆக்ரோஷத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு வதம் செய்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசுரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர் புரிவதற்காக 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.