தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு அணையில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான் . அவனது உடலை பத்து நேர தேடுதலுக்குப் பின் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் .
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியை ஒட்டி குண்டாறு நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கமானது 36 அடி உயரம் கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக குண்டாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
வழக்கமாக இந்தப் பகுதி சுற்றுவட்டார மக்கள் விடுமுறை நாட்களில் இங்கே சென்று குளித்து வருவார்கள். ஆனால் இப்போது கொரோனா தடை உத்தரவுக் காலம் என்பதால், மக்கள் அதிகம் வருவதில்லை என்றாலும், கொரோனா தடை உத்தரவை மீறி சிலர் குண்டாறு நீர் வழித்தடங்களில் சென்று குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கோட்டை கீழபள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த நாவஸ் என்பவரின் மகன் ஜிப்ரின் (15) தனது நண்பர்களுடன் குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளான். நீர்த்தேக்கத்தில் நண்பர்களுடன் விளையாடி குதித்தபடி குளித்த நிலையில் சிறுவன் ஜிப்ரின் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் வெளியில் தகவல் தெரிக்காமலேயே வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இரவு வெகு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பெற்றோர் அவனது நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜிப்ரின் பெற்றோர் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் செங்கோட்டை மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பத்து மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர் .
குண்டாறு பகுதியில் அணையின் மேலிருந்து குதித்து ஆபத்தான முறையில் சிறுவர்கள் விளையாடுவது தடை செய்யப் பட வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.