நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில் இடத்தில் கிறிஸ்துவ சர்ச் கட்டுமானம் நடைபெறுவதை தடுத்து நிறுத்தக் கோரி, இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான (சர்வே எண் 622, 623 1/A) இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தக் கோரி வள்ளியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மேலும், கிறிஸ்தவ சர்ச் நிர்வாகத்துக்கு சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் துணை போகின்றனரா என்று இந்த போராட்டத்தின் போது, கேள்வி எழுப்பினர். அப்போது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டுமானத்தை நிறுத்தி வைத்துள்ளதாக காவல்துறை, மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது.
இருப்பினும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில், முன்புறம் உள்ள மறைப்பை அகற்றாமல் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதில்லை என்று, டாக்டர் த.அரசுராஜா ( இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர்) தலைமையில் வி.பி.ஜெயக்குமார் (இந்து முன்னணி மாநில துணைத் தலைவர்), பெரி.குழைக்காதர் (விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர்), வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் (இந்து முன்னணி மாநில செயலாளர்), எஸ்.தங்கமனோகர் (இந்துமுன்னணி கோட்ட தலைவர்), கே சக்திவேலன் (இந்து முன்னணி கோட்ட செயலாளர்) வழக்கறிஞர் கே.குமார முருகேசன் (பாஜக., மாவட்ட செயலாளர்), வழக்கறிஞர் ஏ.மதுசூதனன் (ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய தலைவர்), எஸ்.சிவராம குட்டி (பாஜக., வள்ளியூர் நகர தலைவர்) பிரமநாயகம் (இந்து முன்னணி நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர்), சுடலை (இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர்), எஸ்.வைத்தியநாதன் (இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்) உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதை அடுத்து, கட்டுமானப் பணி உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் முன்பிருந்த மறைவுகள் அகற்றப்பட்ட பின்னர் போராட்டக்குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர்.