நெல்லையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நெல்லை சந்திப்பு ஆற்றங்கரையில் தாமிரபரணி அன்னைக்கு பெண்கள் சீர் செய்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள நதிக்கரைகளில் பெண்கள் சீர்செய்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடி பதினெட்டு ஆடிப்பெருக்கு வைபவம் நேற்று கொண்டாடப்பட்டது.
பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் நெல்லை தாமிரபரணி நதியை தாய்போல் பாவித்து கருப்பு வளையல் கருகுமணி மஞ்சள் தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை படித்துறையில் வைத்து தாமிரபரணி தீர்த்தத்தை தலையில் தெளித்து சீர்வரிசை பொருட்களை தாமிரபரணிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பான மாதுர் சக்தி சார்பில் நெல்லையில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆடி பதினெட்டாம் பெருக்கு வைபவத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் திரண்ட பெண்கள் சீர்வரிசைப் பொருட்களை தாமிரபரணி அன்னைக்கு வழங்கி அபிஷேக ஆராதனைகள் நடத்தி மாங்கல்ய சரடுகளை வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் நீடிக்கவும் குடும்ப ஒற்றுமை பேணவும் தாமிரபரணி அன்னையை நினைத்து வழிபடுகின்றனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ஆறுமுக கனி, இணை செயலாளர் பால விக்னேஷ், மாத்ரு சக்தி மாவட்ட பொறுப்பாளர் கருப்பாயி, பஜ்ரங் தள் மாவட்ட அமைப்பாளர் முத்துராம், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், பாஜக வக்கீல் அணி மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் உதயசங்கர், சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் மற்றும் மாத்ரு சக்தி அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி பேணப்பட்டு இந்த நிகழ்ச்சி அமைதியாக நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்!