ஆதிச்சநல்லூரில் ஐகானிக் மியூசியம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது!
ஈமத்தாழிகளில் சடங்கு பொருட்களை வைத்து எரிதல், இடுதல், எரித்து இடுதல் , கவிழ்த்து இடுதல், நினைவாக இடுதல் என தாழிகளை பல விதங்களில் வைத்தபோது.. சில சடங்குகளை அன்று செய்து அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உடன் வைத்து பண்டைய மனிதர் புதைத்துள்ளனர்.
ஒரு குழந்தை கருவுற்ற நாளிலிருந்து இறுதிச்சடங்கு செய்யும் வரை கட்டுகளும் சடங்குகளும் என்பது ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் மாதிரி இணைந்தே இருக்கும். சுமார் 3000 ஆண்டுகள் அந்தச் சடங்குப் பொருள்களுடன் மண்ணில் விதைக்கப்பட்ட தொல்பழந்தமிழர்கள் நாகரிகத்தை தொலைத்த இடத்தில் தேடுகிறோம்.
இந்த தேடுதலில் சம்பிரதாயத்திற்காக சடங்குகளை செய்து அகழாய்வைத் தொடங்குவதே… முதுமக்களுக்குச் செய்யும் மரியாதை! அதுமட்டுமல்ல, இறந்து புதைக்கப்பட்ட ஆத்மாக்களை சாந்தப்படுத்தும் செயலாகவும் கருதிக் கொள்ளலாம்!
கட்டுகளையும் சடங்குகளையும் பின்பற்றும் போதுதான் ஒழுக்கமான மனிதனாக ஒருவன் வாழமுடியும். தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும்போதே… தொப்புள்கொடி துண்டிக்கப்பட்டு கொம்பு சத்தம், சங்கு சத்தம் ஒலிக்க ….முதல் சடங்கு தொடங்கப்பட்டுள்ளது.
நம் மூதாதையரின் வாழ்வில் சங்கு மிக மிக முக்கியம் என்பதை கொற்கை அகழாய்வு காட்டுகிறது. பிறப்பு மற்றும் இறப்பு நேரங்களில் பாலூட்டும் கருவியாக கனக மார்பு போன்ற சங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்கை கழுத்து சங்குடன், தாயின் மார்புடன், கரு உருவாகும் கருவறையுடன் ஒப்பிடலாம். தாயின் கருவறை போன்ற சங்கானது ஆதிமனிதன் காலத்தில் அவனது உடம்போடும் உயிரோடும் ஒட்டி உறவாடியுள்ளது.
உடம்பில் உயிர் உருவாவதும் சங்கில்தான்(பிறப்பு)! உடம்போடு உறவாடுவது(திருமணம்) சங்கில்தான்! உடம்பைவிட்டு உயிர்பிரியும் போதும்(இறப்பு) சங்கில்தான்! சங்கு இல்லாத வாழ்க்கை என்பது குரல் இல்லாத கழுத்தைப் போன்றது.
சங்கு என்பதற்கு, உள்ளீடைப் பெற்று முறையான வெளியீடாக திருப்பிக் கொடுத்தல் என்ற பொருளும் நாம் கொள்ளலாம். இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து கற்காலம் வரை.. மனிதன் ஏன் சங்கை பயன்படுத்த வேண்டும்? இவ்வுலகில் எத்தனை பொருட்கள் அவன் கண்ணில் பட்டாலும் சங்கை மட்டும் அணிகலன்களாகவும் விலைமதிக்க முடியாத ஆபரணங்களாகவும் பயன்படுத்த வேண்டும்?
இந்தக் கேள்விக்கு இன்று நடைபெறும் முதல் இடை மற்றும் கடை சங்கொலி விழாக்கள்தான் ஆதாரமாகத் தொடருகின்றது. சங்கை ஆதிமனிதன் மட்டுமல்ல நாமும்கூட பெற்ற அன்னையாகத் தான் பார்க்கிறோம்.
தாலாட்டும் குரல் சங்கு, பாலுட்டும் சங்கு, கருவறை சங்கு என அவன் பார்த்தது எல்லாமே சங்கு போன்று இருந்ததால் சங்கை பயன் படுத்தியிருக்கிறான் என்று ஒரு முடிவுக்கு வரலாம். அதன் காரணமாகத் தான் படைத்த கடவுள்களின் கைகளில் எல்லாம் சங்கை கொடுத்துள்ளான்.
சடங்கு என்பதற்கு மரியாதையுடன் பின்பற்றுதல் என்று ஒரு பொருளும் உண்டு! பொருநைப் பெண்ணானவள் சங்குக் கழுத்தில், சங்கு நகையணிந்து, சங்கு வளையல்கள் சிணுங்க அரிசி உணவைப் பொறுமையுடன் பறிமாறினாள்…..(கற்பனை செய்து கொள்ளுங்கள்)
இந்திய தொல்லியல் துறைக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் அவர்கள் பணி.
- சிவகளை ஆ.மாணிக்கம்
(சிவகளை தொல்லியல் கழகம்)