
திருநெல்வேலி-தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர ரெயில் சேவை
சிறிய இடைவெளிக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 4 ந்தேதிவரை இயக்கப்பட இருக்கிறது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் நெல்லை-தாம்பரம் இடையே தென்காசி விருதுநகர் மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூலையில் அந்த ரெயில் இயக்கப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ரெயில் வருகிற ஆக 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் (06004) வருகிற 7-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் தாம்பரம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (06003) வருகிற 8-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரைக்கும், காலை 10.35 மணிக்கு நெல்லைக்கும் வந்தடைய உள்ளது. இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 ரெயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த ரயிலுக்கு தற்போது முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கவேண்டும் என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.