நெல்லையப்பர் கோவில் ஆனி ப்ரம்மோத்ஸவ கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனித் திருவிழா தேரோட்டத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் நெல்லைக்கு வருகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆனித் திருவிழா இன்று தொடங்கியது. இன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது. கொடிமரத்துக்கு தூப தீப ஆராதனைகள், பதினாறு வகை உபசாரங்கள் ஆகியன விமர்சையாக நடைபெற்றது.
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.