செங்கோட்டை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சாதாரணமாக இருந்தது. வார இறுதி நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
குற்றால சீஸன் துவங்கி இரண்டாவது மாதம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கடந்த நில நாட்களாக மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீரின் அளவு சாதாரணமாக இருந்தது. அதிக அளவிலும் இன்றி, குளிப்பதற்கு ஏற்ற அளவில் மிதமான தண்ணீர் விழுந்ததால், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை குதூகலமாக குளித்து ஆட்டம் போட்டனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நெருக்கியடித்ததால், குளிப்பதற்கு மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். இந்நிலையில் நேற்று மாலை முதலே குற்றாலம், செங்கோட்டை, தென்காசி சுற்றுப் பகுதிகளில் இதமான காற்று வீசியது. சாரல் அவ்வப்போது தலை காட்டியது. மழையோ கனத்த மழையோ இன்றி வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இடையிடையே சாரல் மழை பெய்து வந்ததால் சீஸனின் இனிமையை சுற்றுலா பயணிகள் நன்றாகவே அனுபவித்தனர்.
இருப்பினும், வாகனங்கள் அதிக அளவில் வந்ததால், குற்றாலம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஐந்தருவி செல்லும் பாதையிலும் பழைய குற்றாலம் செல்லும் சாலையிலும் தனியார் வாகனங்கள் அதிகம் அணிவகுத்தன.