செங்கோட்டை: திங்கள் கிழமை இன்று முதல் (ஜூலை 9) செங்கோட்டை கொல்லம் மலைப் பாதையில் பாசஞ்சர் ரயில் – பயணிகள் ரயில் இயக்கப் பட்டது. இன்று முற்பகல் 11.35க்கு செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரயில் பின்னர் 11.55க்கு கொல்லம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இன்று முதல் நாள் என்பதால், செங்கோட்டை பயணிகள் நல சங்கத்தினர் சார்பில், கொல்லம் செல்லும் முதல் ரயிலின் டிரைவர், உடன் இருந்த பணியாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கும், பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. தொடர்ந்து, ரயில் இஞ்சின் அருகே சென்று, செங்கோட்டை பயணிகள் நலச் சங்கத்தினர் சார்பில் டிரைவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப் பட்டது. தொடர்ந்து 11.55க்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம், ஆரியங்காவு, நியூ ஆரியங்காவு, கழுதருட்டி, தென்மலை வரை அந்த ரயிலில் சென்ற செங்கோட்டை பயணிகள் நலச் சங்கத்தினர், பின்னர் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி மறு மார்க்கத்தில் இன்று காலை 10.35க்கு புறப்பட்டு வந்த ரயிலில் தென்மலையில் ஏறி செங்கோட்டைக்கு திரும்பினர்.
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏற்கெனவே செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட ரயிலின் நீட்டிப்புதான். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட ரயிலே கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வரும் ரயில், திருநெல்வேலிக்கு தொடர்ந்து செல்கிறது. எனவே திருநெல்வேலியில் இருந்து கொல்லம் வரை இந்த ரயிலில் பயணிக்கலாம் என்பது பயணிகளுக்கு மிகவும் வசதியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இந்த ரயில்கள் இயக்க நேரம், நிறுத்தும் இடங்கள் குறித்த முந்தைய செய்திக்கு படிக்க… ஜூலை 9 திங்கள் முதல் கொல்லம்-செங்கோட்டை பாசஞ்சர் இயக்கம்
முன்னதாக, செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் நலச் சங்கத்தினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே பாதுகாப்புக்காக ரயில் நண்பர்கள் குழுவினர் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
செங்கோட்டை ரயில் நண்பர்கள் குழுவினர் தற்போது 10க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு, பயணிகளுக்கான உதவிகள் ஆகிய பணிகளில் தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து பணி செய்கின்றனர்.