குமரி மாவட்ட மக்களின் 20 ஆண்டு கால கனவான, பார்வதிபுரம், மார்த்தாண்டம் புதிய மேம்பாலங்கள் இன்று திறக்கப் பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள் முன்கூட்டியே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் முதன்முறையாக இரு பாலங்களும் இரும்பால் அமைக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதிகளில் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கும் எளிதில் கடக்கவும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மார்த்தாண்டம் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தொலைவிலும், பார்வதிபுரம் பகுதியில் 1.5 கிலோ மீட்டர் தொலைவிலும் இரு மேம்பாலங்கள் சுமார் 372 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டன. தற்போது பணிகள் முடியும் நிலையில் இரு பாலங்களிலும் கனரக வாகனம் அனுமதிக்கப்படுவதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய பாலங்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது தங்களுக்கு பேருதவியாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை பணிகள் முடிவடையாத நிலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளன.