பொருளாதார ரீதியாக பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கும் பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு பாராட்டு தெரிவித்து மோடியை வாழ்த்தி நெல்லையில் கூட்டம் நடைபெற்றது.
பிப்.2 காலை 10 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷன் ராஜ் மஹாலில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஓதுக்கீடு அளித்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி ஆதரவு அளிக்க. முற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது
இதில் பங்கேற்றவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினரின் தற்கால நிலையை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். படித்தும் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல், மளிகைக் கடைகளில் பொட்டலம்கட்டிக் கொடுத்தும் மருந்துக் கடைகளிலும், பிற வியாபாரத் தலங்களிலும் சாதாரண வேலைகளுக்குக் கூட வாய்ப்பு இன்றி மிகவும் சிரமப் படுகின்றனர் என்று கூறினர்.
மேல்நிலைப் பள்ளி கல்லூரிகளில் நன்றாகப் படித்தும் மேல் படிப்பு படிக்க வழியின்றி, அரசின் உதவித் தொகையோ சரியான வழிகாட்டலோ வாய்ப்புகளோ அமையாமல் வாழ்க்கையில் மிகவும் பின் தங்கிப் போவதையும், அதனால் சரியான விதத்தில் பெண்கள் அமையாமல் பலருக்கும் திருமணம் கைகூடி வராமல், வாழ்நாளைக் கழிப்பதையும் கண்ணீருடன் எடுத்துக் கூறினர்.
தந்தையிடம் பொருளாதார வசதி இல்லாமல் போனால், அவரது சந்ததிகளால் இனி எக்காலத்திலும் மேல் எழவே இயலாது என்ற துர்பாக்கியமான சூழ்நிலையை பிரதமர் மோடி தகர்த்திருப்பதாகவும், திறமை இருந்தால் அவர்களும் முன்னேற வாய்ப்பு ஏற்படும் என்று ஆக்கியுள்ளதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பலரும் பேசினர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் திமுக.,வை எதிர்த்தும், ஸ்டாலினின் மோசமான அரசியல் செயல்பாடுகளுக்கு கண்டனமும் தெரிவிக்கப் பட்டது. முற்பட்ட பிரிவினரின் வாக்குகள் வேண்டாம் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு ஸ்டாலின் இது போன்ற அரசியலில் ஈடுபடுகிறார் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறினர். எனவே இந்தத் தேர்தலில் முற்பட்ட பிரிவினர் எவரும் திமுக.,வின் எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போடக் கூடாது என்று ஒருமனதாக அனைவரும் தீர்மானம் போட்டனர்.