அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு, திருநெல்வேலி
கல்வி மண்டலம் சார்பில் அண்மையில் பல்கலை வளாக ஜனநாயகத்தை மீட்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப் பட்டது.
இதை அடுத்து, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மான நகலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிச்சுமணியிடம் மாணவர் தலைவர்கள் வழங்கினர்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஏபிவிபி., அமைப்பைச் சேர்ந்த பிருத்விராஜன், இந்த சந்திப்பின் போது, துணைவேந்தரிடம் மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கியத்துவத்தையும், உயர் கல்வியில் உள்ள பிரச்னைகள், பல்கலைக் கழகத்தில் உள்ள பிரச்னைகள் இவை குறித்தும் துணைவேந்தரிடம் எடுத்துரைத்தோம் என்றார்.
ஏபிவிபி.,யின் கோரிக்கைகளான மாநில முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம், வளாக ஜனநாயகத்தின் அங்கமான மாணவர் பேரவைத் தேர்தல், ஒரு பாடத்தை ஓர் ஆசிரியர் நடத்துதல், யோகா, கணினி பாடத்தினை கட்டாயமாக்குதல், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகரில் அரசு கலைக் கல்லூரி அமைத்திடுதல் போன்ற கோரிக்கைகளை மாணவர் தலைவர்கள் துணைவேந்தரிடம் எடுத்துரைத்தனர்.
இவற்றைப் பரிவுடன் கேட்டுக் கொண்ட துணை வேந்தர், ஏபிவிபி.,யின் 6 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும்
மற்ற கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தார்.
துணைவேந்தருடனான இந்த சந்திப்பில் மாநில துணைத் தலைவர் பேரா சவிதா, மண்டல பொறுப்பாளர் ஆசிரியர் செந்தமிழரசு , பல்கலைக்கழக தலைவர் R.P ராமன் , செயலாளர் வெங்கடேஷ் மாணவிகள் பொறுப்பாளர் சினேகா மற்றும் அலுவலக செயலாளர் விக்னேஷ் தூத்துக்குடி மாநகர அமைப்பாளர் தினேஸ், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஹெக்கேவர் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.