சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வருண யாகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. குமரி மாவட்டத்திலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
வெயில் கொடுமையில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வருண யாகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இந்திர விநாயகர் சன்னதியில் யாக பூஜை நடைபெற்றது. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர், கொன்றையடி சுவாமி சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதே போல் இந்திர விநாயகர் சன்னதியில் உள்ள நந்தியம்பெருமானை குளிர்வித்து பூஜைகள் செய்யப்பட்டன. இதற்காக நந்தி பகவானை சுற்றி சிமென்ட் சுவர் எழுப்பப்பட்டது.
பின்னர் நந்திபகவான் முழுவதும் மூழ்கும்படியாக தண்ணீர் நிரப்பப்பட்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். இந்த வருண யாகம் மற்றும் பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்