கமல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிடம் பணம் வாங்கிவிட்டாரா? அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் கொண்ட பள்ளப்பட்டி தொகுதியில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து; அவர் பெயர் கோட்சே! என்றார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதற்கு கருத்து தெரிவித்த போது, கமல் கருத்து விஷம் வாய்ந்தது. அவரது நாக்கில் சனி. அவரது நாக்கை அறுக்கப் போகிறார்கள்! என்று கூறினார்.
இதை அடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஐஎஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா? பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. ஹிந்து மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு. பிரிவினைவாதம், மதவாதத்தை கமல் தூண்டுகிறார். அவருக்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
கமல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டால், எனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். கமல் திருந்துவதற்கு வாய்ப்பாகத்தான் எனது கருத்தை பதிவு செய்தேன். ஆலோசனையாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, அராஜகமாக பயன்படுத்தக்கூடாது.
ஸ்டாலின், வீரமணி, திமுக.,வில் சில பேச்சாளர்களுடன் கமலும் சேர்ந்து, ஹிந்து கடவுளை வம்பிழுக்கின்றார். கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர். அவர் இத்தாலிக்கு தான் செல்ல வேண்டும்.
வீரமணி விளங்காதவர். அவரது பேச்சு திமிர் பேச்சு. பேச்சை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை மக்கள் அடக்குவார்கள்.
நாங்கள் கேட்காமல் இருந்தால், கமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார். கமலை கண்டித்தால் தவறா? அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? கமல் பேசுவது நியாயம் இல்லை.
இந்தியா மதச்சார்பற்ற நாடு. தேவையில்லாமல் விஷத்தை கக்குவது நாட்டிற்கு ஆபத்து. இந்தியாவின் ஒருமைப் பாட்டிற்கு நஷ்டம். சட்டம் ஒழுங்குக்கு பிரச்னை.
கமல் பேச்சு பயங்கரவாதத்தை தூண்டக்கூடிய பேச்சு. ஒரு குறிப்பிட்ட மக்களை பாதிக்கும் பேச்சு. மன அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பேச்சு.
கமல் கட்சியை தேர்தல் ஆணையம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். கமலுக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமே இல்லை… என்று கூறினார் ராஜேந்திர பாலாஜி.
மேலும், நான் எந்த உறுதிமொழியை மீறினேன்? விரோதமாகப் பேசினேனா? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஒரு செய்தியாளர் அவரிடம், கமல் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுத்து இருப்பது உங்கள் பேச்சால் தானே என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, அதற்கு தான் சொன்னேன் கமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று! என்றார்.
அதற்கு செய்தியாளர், ஒரு தமிழக அமைச்சர் இப்படி பேசலாமா? என்று கேட்டார்.
பதிலளித்த அமைச்சர், நாங்கள் முதலில் தேசியவாதிகள் என்றார்.
பதிலுக்கு நிருபர், ஜெ இருந்திருந்தால் இப்படி பேசி இருப்பீர்களா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம்மா இருந்திருந்தால் கமல் கட்சி ஆரம்பித்து இருப்பாரா? என்று பதில் எழுப்பி மடக்கினார்.
அவரது இந்தப் பதில்கள், இப்போது இணைய தள வாசிகளிடம் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இத்தனை நாள் இந்த மனுசன் எங்கய்யா இருந்தான் என்று ராஜேந்திர பாலாஜியை புகழ்ந்து கருத்து பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்!