திருச்சி மாவட்டம் துறையூர் அருகே டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
முசிறியை அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் டாட்டா ஏஸ் வாகனத்தில் எஸ்.என். புதூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கச் சென்றனர். திருமனூர் அருகே அவர்கள் வந்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது.
இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தடுப்புகள் இன்றி பாழடைந்து இருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் வாகனம் பாய்ந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் சிக்கியிருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், இந்த விபத்தில் 4 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என 8 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.