தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் குறித்த தகவல்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்ததாகப் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் திருச்சியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இருவரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த அக்டோபரில் திருச்சி இனாம்குளத்தூரில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையின் போது கைதானவர் அளித்த தகவலின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட கண்காணிப்புகளின் அடிப்படையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் கே.ஆர்.எஸ். நகரில் வசித்து வரும் ஜாபர், சர்புதீன் இருவரும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் குறித்த தகவல்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ததை அடுத்து அவர்கள் மீதான சந்தேகம் பெரிதானது.
இந்நிலையில் இன்று காலை 9.30க்கு அவர்கள் வீட்டிற்குச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். என்.ஐ.ஏ. டிஎஸ்பி ஜார்ஜ் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பிராங்கோ தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஜாபர், சர்புதீன் ஆகியோரின் வீடுகளில் சோதனையிட்டனர்.
அதில், அவர்கள் பயன்படுத்திய லேப்டாப், செல்போன், பென்டிரைவ் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். பின்னர் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப் பட்டது.