அயோத்தியில் ராமபிரானுக்காக அமைய உள்ள ஆலயத்துக்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் புனித நீர் புனித மண் ஆகியவை எடுத்துவரப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண இதிகாசத்தின் படி, ஸ்ரீராமர் பயணம் செய்த புனித தலங்களில் இருந்து மண் எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் ராமபிரான் பயணித்த புண்ணிய தலமான ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தி ஆலயத்திற்கு புனித மண் எடுத்து அனுப்பியுள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி முனையிலிருந்து சமுத்திர நீரும் புனித மண்ணும் எடுத்து அனுப்பப்பட்டது
அதுபோல் ஸ்ரீராமபிரானின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலிருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் ஆகியவை ஆகஸ்ட் 5ம் தேதி அடிக்கல் நாட்ட இருக்கும் ராம ஜென்மபூமிக்கு தபால் நிலையம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.