மணப்பாறையில் வங்கி அருகே பணத்தை தவற விட்டவர் விபரம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ள காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கீழ் ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சுருட்டையன் மகன் சிங்கமுத்து. இவர் திங்கட்கிழமை, திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது வங்கியின் முன்பு சாலையில் ரூ.500 அடங்கிய பணத்தாள்கள் கிடைந்துள்ளது.
அதனை சிங்கமுத்து எடுத்து பார்த்தபோது அதில் ரூ.33 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது. அதனையடுத்து அருகில் உள்ள காவல்நிலையம் சென்ற சிங்கமுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா முன்னிலையில் அந்த பணத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டி ஒப்படைத்துள்ளார்.
வங்கி அருகே பணத்தை தவறவிட்ட நபர், அந்த பணத்தின் விபரம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ள துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா அழைப்பு விடுத்துள்ளார். சிங்கமுத்துவின் மனிதாபிமான செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.