
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் செல்லும் 2 லட்சம் கன அடிக்கும் மேற்பட்ட வெள்ள நீர் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள 4 கிராமங்கள் துண்டிப்பு தங்கள் உடமைகளுடன் தண்ணீரைக் கடந்தும் படகுகள் மூலமும் வெளியேறி நிவாரண முகாம்களுக்கு மக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் நீர் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் படிப்படியாக உயர்ந்து கிராமங்கள் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதி வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறி வருகின்றனர். மேலும் கிராமங்களில் உள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ள நீர் செல்வதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீரை கடந்தும் படகுகள் மூலமும் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் மற்றும் அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.மேலும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் கூடுதல் படகுகள் மூலம் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
