முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்த நபர் கைது செய்யப் பட்டுள்ளார். கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி இன்று ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, தவளப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு நபர் கேன்களில் டீசல் கொண்டு செல்வதைப் பார்த்துள்ளார். உடனே அவர், அந்த நபரிடம் எங்கு டீசல் வாங்கி செல்கிறீர்கள் என்று விசாரித்தார். அப்போது அருகில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள தோட்டத்தில் ஒருவரிடமிருந்து டீசல் பெற்றுச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த நபரை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு விரைந்தார் சரவணமூர்த்தி. அங்கே ஒரு தென்னந்தோப்பினுள் முறைகேடாக டீசல் மற்றும் பெட்ரோல் விற்றுக்கொண்டிருந்த புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்த கொடிஅரசு (47), த.பெ.ராஜா என்பவரை விசாரித்ததில், அந்த நபர் முறைகேடாக பெட்ரோல் டீசல் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து உரிய அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பெட்ரோல் டீசல் விற்று வருவது குறித்து, காவல் துறை அலுவலர்களுக்கும், குடிமைப் பொருள் வழங்கும் தரக் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெட்ரோல் டீசல் விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் 120 லிட்டர் டீசல் மற்றும் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி கேன்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதை அடுத்து வாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், குடிமைப்பணி பொருள் வழங்கும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் சார்பு ஆய்வாளர் சையது அலி ஆகியோர் கொடிஅரசு மீது வழக்கு பதிவு செய்து பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர்!