கரூர்: திமுக., காங்கிரஸாரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் திமுக மற்றும் காங்கிரஸ் மீது புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்….
அரவக்குறிச்சி தொகுதி திமுக., வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று இரவு எனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து செந்தில்பாலாஜி, ஜோதிமணி ஆகியோர் தொலைபேசியில் என்னை மிரட்டும் தொனியில் பேசினர்.
இறுதிக் கட்ட பிரசாரத்துக்காக கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசாரம் செய்ய, செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் மிரட்டல் விடுத்தும் அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால் அங்கு பிரசாரம் செய்ய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளோம் எனக் கூறி மனு அளித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளித்துள்ளோம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
என் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் மற்றும் திமுக.,வினர் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்திய நிலையில், போலீஸ் எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்தேன். அவர் வந்து என்னை மீட்டார். எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது.
ஜனநாயகத்தில் நேர்மையாக பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்று கூறினார் அன்பழகன்.