பொன்னமராவதி வழக்கில், ஒரு சமூகப் பெண்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட குகன் என்பவர் கைது. பிரேம் குமார் என்பவரை பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியானது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தைச் சோ்ந்த மக்கள், தங்கள் சமூகத்தை வேற்று சமூகத்தைச் சோ்ந்த சிலா் இழிவாகப் பேசி வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் பதிவிட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இது தொடா்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியைத் தொடா்ந்து பொன்னமராவதியில் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறை வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
தொடா்ந்து தங்கள் சமூக பெண்கள் குறித்து வாட்ஸ் அப்பில் இழிவாக பேசியவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, நல்லூா், தேனிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதை அடுத்து, மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம், பொன்னமராவதி உட்பட 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது.
இந்நிலையில் சா்ச்சைக்குரிய ஆடியோவை பரப்பியவா் திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்த அய்யாசாமி என்பவா்தான் என தவறாக அவரது புகைப்படத்தை வைத்து அவதூறு பரப்பிய, கொத்தமங்கலத்தைச் சோ்ந்த குகன் என்பவர் கைது செய்யப் பட்டார்.
திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அய்யாசாமி கொடுத்த புகாாின் அடிப்படையில், குகனை போலீஸார் கைது செய்தனர்.