துறையூரை அடுத்த டி.முருங்கபட்டி காட்டுகொட்டகையில் குடும்ப தகராறில் நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப் பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உள்ள உப்பிலியபுரம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது டி முருங்கபட்டி காட்டுகொட்டகை! இங்கே வசித்து வருபவர், 67 வயதாகும் பழனிச்சாமி! கூலி வேலை செய்து வரும் இவர், நேற்று இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பினார்!
அப்போது இவரது மனைவி உண்ணாமுலை மற்றும் மகன் பெரியசாமி (வயது 25) மகள் கவிதா (வயது 14) மூவரும் வீட்டில் இருந்தனர். அப்போது பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .
இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மனைவி, மகன், மகள் ஆகியோரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது!
இதையடுத்து மகள் கவிதா செல்போன் மூலம் 100க்கு போன் செய்தார். தனது தந்தை துப்பாக்கியை வைத்து மிரட்டுவதாகக் கூறி, தாங்கள் வசிக்கும் இடத்தையும் கூறியுள்ளார்.
தகவலை பெற்றுக் கொண்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர்.
பின்பு பழனிச்சாமியை அழைத்துச் சென்று விசாரணை செய்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் பொழுது உங்களிடம் துப்பாக்கி எப்படி வந்தது? துப்பாக்கிக்கு போதுமான ஆவணங்கள் உள்ளதா? என்றெல்லாம் விசாரணை செய்தனர்!
அப்போது பழனிச்சாமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் இந்த நாட்டு துப்பாக்கியை சூக்கலாம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 48) என்பவரிடமிருந்து வாங்கியதாகக் கூறியுள்ளார்.
பின்பு மூர்த்தியைப் பிடித்து விசாரணை செய்தபோது, நாட்டுதுப்பாக்கிக்கு போதுமான ஆவணங்கள் இல்லாத கள்ளத்துப்பாக்கி என்பது தெரியவந்தது!
இதை அடுத்து உப்பிலியபுரம் போலீசார் பழனிச்சாமி மற்றும் கள்ளத் துப்பாக்கியை விற்ற மூர்த்தி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் இதுபோன்று அந்தப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்துள்ளார்களா? அதற்கு அனுமதி பெற்றுள்ளார்களா என்றெல்லாம் விசாரணை செய்து வருகிறார்கள்!