பள்ளப்பட்டியில் நான் பேசியது ஹேராம் படத்தில் நான் என்ன எடுத்திருந்தேனோ அதைத் தான் பேசினேன், பள்ளப்பட்டியில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் சென்னை மெரினா பீச்சிலும் அதைத் தான் பேசினேன் என்றார் கமல்ஹாசன்.
சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சார களத்தில் மே 12 அன்று அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் தேர்தல் பிரசாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.
கமலின் இந்தப் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் இந்து முன்னணி நிர்வாகி புகார் கொடுத்ததின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இதற்காக கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் ஆஜராகி 2 பேர் பிணையுடன் நேர்நிறுத்தப்பட்டார் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
அப்போது செய்தியாளர்களை சந்திக்காமல், சுமார் 1 ½ மணி நேரம் கழித்து அவர் தங்கி இருந்த இடத்தில் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் அது குறித்து பேசுவது முறையல்ல! இந்தியாவில் பேச்சுரிமை கருத்து சுதந்திரம் உள்ளது.. என்றார் கமல்.
அப்போது, திருப்பரங்குன்றம் பகுதியில் அதே போல பிரசாரத்தில் பத்திரிக்கையாளர்களை மட்டுமே குற்றம் சாட்டியது குறித்து கேட்ட போது, இன்றும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தான் தலையும் வாலும் புரியாமல், திணித்து செய்தியாக்கியதுதான் இந்த நிலை என்றார்.
ஒரு கலைஞனாக பல தரப்பு மக்களையும் நீங்கள் திருப்திப்படுத்தியுள்ளீர்கள்,. ஆனால் அரசியல் கட்சியின் சார்பில், மக்களை திருப்தி படுத்த முடியவில்லை என்று நினைத்துள்ளீர்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், ஹேராம் படத்தில் நான் எழுதி நடித்தது தான்…. பள்ளப்பட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் சென்னை மெரினாவிலும் பேசினேன். அது குறித்து எங்கு வேண்டுமென்றாலும் பேசலாம் என்றார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் தாங்கள் வாங்கிய வாக்கு வித்யாசத்தினை வைத்து பஞ்சாயத்து தேர்தலை எப்படி உங்கள் கட்சி சந்திக்க உள்ளது என்று கேட்டபோது, அது குறித்து நாங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றோம்! மக்கள் எங்களுக்கு பெரும் வரவேற்பு கொடுக்க உள்ளனர். மேலும், சென்ற தேர்தல்களில் நாங்கள் வாங்கிய வாக்கு வங்கிகளை பார்த்து அறிஞர்களே பிரமித்து உள்ளனர் என்றார் கமல்.
இந்தி திணிப்பு மற்றும் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மக்கள் மீது திணிக்க கூடாது. ஆகவே, கெயில், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது! அரசியல்வாதிகளும், பத்திரிக்கைகளும் ஒன்று சேர வேண்டும் என்றார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க அமைச்சரவையில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்! அது குறித்து பேச வேண்டுமென்றால், கடந்த 50 ஆண்டு காலமாக தமிழர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்றார் கமல்.
பிறகு விமானத்திற்கு நேரமாகி விட்டது என்று கூறிவிட்டு, விறுவிறுவென கிளம்பிச் சென்றார் கமல்.