தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருச்சி அருகே துவாக்குடி காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார்.
துவாக்குடி டோல்கேட்டில் இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மற்றும் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் ஆகியோர், துவாக்குடி போலீஸாரால் தடுத்து நிறுத்தப் பட்டனர்.
பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப் பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் புதுக்கோட்டை பகுதியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சாதாரணமாக இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதமும், தொடர்ந்து ஒரு தரப்பு அரிவாளால் கடைக்குள் புகுந்து இருவரை வெட்டியதால், இந்த மோதல் இரு பிரிவினருக்கு இடையேயான மோதலாகவும் மாறியது.
தனிப்பட்ட வாக்குவாதத்துக்கு அரிவாளால் வெட்டி, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாம் மதத்தினர் என்பதாலும், தாக்குதலுக்கு உள்ளானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்பதாலும் மத மோதலாக இது உருவெடுத்தது. மேலும் வன்முறை ஏற்படாமல் தடுக்க, புதுக்கோட்டை போலீஸார் அமைதிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.