அமெரிக்காவின் க்ளீவ்லாண்டில் வருடம் தோறும் நடைபெறும் தியாகராஜ ஆராதனை உத்ஸவம் இந்த வருடம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி, கோவிட் 19 வைரஸ் தாக்கம் இப்போது உலகெங்கும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளில் பல்வேறு நபர்களுக்கு கொரோனா தாக்கம் இருப்பதாக கண்டறியப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வழக்கம் போல் வருடம் தோறும் நடத்தப் படும் க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை விழா இந்த வருடம் நடைபெறுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் இது குறித்து கூறிய போது, தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். அரசின் அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, நிகழ்ச்சியை நடத்துவது குறித்து யோசிப்போம். அரசின் பரிந்துரைகள் நம் திட்டமிடலுக்கு மாறானதாக அமைந்தால், நாம் நிகழ்ச்சி நடத்துவது குறித்து யோசிப்போம். நமக்கு நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களின் பாதுகாப்பும் நலனும் முக்கியம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பலரது வேண்டுகோளின் படி, மார்ச் 15 அன்று இறுதியாக இது குறித்து முடிவு செய்யலாம் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும், இன்று அவர்கள் நிகழ்ச்சியை ஒத்திவைப்பது என்ற முடிவு எடுத்து அறிவித்துள்ளனர். இதை அடுத்து க்ளீவ்லெண்ட் தியாகராஜ ஆராதனை மகோத்ஸவம் ஒத்திவைக்கப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.