சென்னை:
மகாவித்வான் வயலின் மேதை பரூர் எம்.எஸ்.அனந்தராமன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 88.
இசை மேதை பரூர் சுந்தரம் ஐயர் சென்னைக்குக் குடியேறிய பின்னர் தமது மகன்களான எம்.எஸ்.அனந்தராமன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரையும் வயலின் இசை மேதைகளாக உருவாக்கி, மூவரும் இணைந்து மேடைகளில் இசை வளர்த்தனர். பின்னாளில் எம்.எஸ்.அனந்தராமன் தனது வாரிசுகளை இசைத்துறையில் விற்பன்னர்களாக்கினார்.
அகில இந்திய வானொலியில் ஆர்ட்டிஸ்டாக சுமார் 70 வருடங்களுக்கும் மேல் ஒலிபரப்புத் துறையில் பணி செய்தவர். அவரது மகன்களான எம்.ஏ.சுந்தரேஸ்வரன், எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி, மகள் எம்.ஏ.பாகீரதி ஆகியோரையும் இசைத்துறையில் ஈடுபடுத்தினார். இவர்களில் மகன்கள் இருவருமே வானொலி நிலைய ஆர்டிஸ்ட்களாக உள்ளனர். மேடைக்கச்சேரிகளில் தமது இரு மகன்களுடன் இணைந்து மூவர் வயலினிசையையும் நடத்தியவர் எம்.எஸ்.அனந்தராமன்.
சென்னை மயிலாப்பூர் தியாகராஜ சமாஜத்தை அடுத்துள்ள இல்லத்தில் வசித்து வந்த அன்னார் இன்று காலை 5.30 மணி அளவில் காலமானார்.