சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டார் இவர். அப்பாவிடம் அனுமதி கேட்டார். அப்படியே கொஞ்சம் பணமும் கேட்டார். இரண்டுமே கிடைக்கவில்லை!
வேறு வழியின்றி, வீட்டையே திருவையாறு என மாற்ற எண்ணினார். தியாகராரின் படம் வாங்கவும் வழி தெரியவில்லை! தன் வீட்டிலேயே ஆராதிக்க தந்தை தன் கையாலேயே தியாகராஜ ஸ்வாமியின் படத்தை வரைந்து கொடுக்க, தன் நண்பர் வீணை சிவா மற்றும் பிவி ராமன் – பிவி லக்ஷ்மணன் இவர்களோடு இணைந்து 1952ஆம் ஆண்டு ஸ்ரீசத்குரு கான நிலையம் தொடங்கினார். அவர், மிருதங்க வித்வான் நாகை.சௌந்தர்ராஜன்.
கடந்த ஆண்டு வரை தாமே இருந்து ஆண்டுதோறும் தவறாமல் தியாகராஜ ஆராதனை உத்ஸவமும் நடத்தி வந்தார். தியாகராஜரின் மீதும் இசையின் மீதும் அளவில்லா பற்றுக் கொண்ட நாகை சௌந்தர்ராஜன் சில மாதங்களுக்கு முன் பரமபதம் அடைந்தார்.
கடந்த 65 ஆண்டுகளாக வருடம் தவறாமல் ஜனவரியில், எந்த வித தடையும் இல்லாமல் தியாகராஜ ஆராதனை உத்ஸவம் நடத்துவது அந்த தியாகராஜனின் கருணை என்பார். இந்த உத்ஸவத்தில் பிரதான ஆராதனை இவரது தந்தை வரைந்து கொடுத்த தியாகராஜர் படத்துக்குத்தான்.
இவரிடம் கற்றுக்கொண்டு அரங்கேறியவர் பட்டியல் பெரிது. இந்த ஆண்டு பிப்.9, பிப்.10 என இரண்டு நாட்கள் ஆராதனை உத்ஸவம் நடக்கிறது. மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் அமைந்திருக்கும் பாண்டியன் ஹாலில் விமரிசையாக நடக்க இருக்கிறது.
நாகை சௌந்தர்ராஜன் இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகவும் எளிய வாழ்க்கை நடத்தியவர். இவரது பக்தியினால்தான் களக்காடு ராம நாராயணன், எம் எல் வி, மாம்பலம் சகோதரிகள், எம் சந்திரசேகரன், பாம்பே சிஸ்டர்ஸ், Flute ரமணி, கே வி ராமானுஜம், திருவிடை மருதூர் ராதாகிருஷ்ணன் என்று பெரிய லிஸ்ட்டில் ஜாம்பவான்கள் இங்கு வந்து சந்தோஷமாக தியாகரஜரை ஆராதித்து விட்டுப் போகிறார்கள்.
துளியும் விளம்பரத்தினை விரும்பாத இவருக்கு பாரத் கலாசார், ம்யூசிக் அகாடெமி, கிருஷ்ண கான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிறார்கள்.