சென்னை ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமின் தர மறுத்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
24 மணி நேரத்திற்குள் 4 முறை ப.சிதம்பரம் இல்லத்துக்கு சென்றுவிட்டனர் சி.பி.ஐ.அதிகாரிகள். இதனை குறித்து பல்வேறு கருத்துக்கள் ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் பிரமுகர்கள் அறிவித்து வருகின்றனர்.
அவ்வாறு சிதம்பரம் ஒரு வேளை கைது செய்யப்பட்டால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.சென்னையில் போராட்டம் நடத்தினால் அதில் தானே தலைமையேற்கிறேன் என கூறியிருக்கிறாராம் கே.எஸ்.அழகிரி. இதேபோல் கார்த்தி சிதம்பரம் அண்மையில் வெற்றி பெற்ற சிவகங்கை தொகுதியிலும் போராட்டத்துக்கு தயாராக இருக்குமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிதம்பரம் ஆதரவாளர்கள் போராட்டம் என்ற குறுகிய வட்டத்துக்கு பதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தும் எண்ணமும் இருக்கிறதாம்.
இதற்கு திமுக தலைவர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒத்துழைப்பார்களா என்ற தயக்கமும் கே.எஸ்.அழகிரிக்கு உள்ளதாம். கார்த்தி சிதம்பரம் தனது தந்தைக்காக நேற்றிரவு முழுவதும் கண் இமைக்காமல் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், எதுவும் நடக்கலாம் ஆயத்தமாக இருங்கள் என போராட்டத்திற்காக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.