ஆக.22 நேற்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட பலர் முனைவர் பட்டம் பெற்றனர்.
இதில், திருமாவளவன் செய்த ஆய்வும், அப்போது உருட்டி மிரட்டி முறைகேடாக வைவா எனப்படும் நேர்முக ஆய்வில் மூடிய அறைக்குள் ஆய்வினை சமர்ப்பித்ததாகவும் கூறி புகார் தெரிவித்து வந்த அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மானவர் அமைப்பினர் தற்போது இதன் பேரில் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில்…
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 22-08-2019 நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத்தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றார்.
தொல் திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்க கூடாது அவர் மேற்கொண்ட ஆய்வில் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை இணைத்துள்ளார்! மேலும் பல்வேறு விதிமுறைகளை மீறி மோசடிகளை செய்து தான் இந்த பட்டம் பெறுகிறார் என ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தோம்!
இதற்கிடையில் நேற்று 22-08-2019 திருமாவளவன் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கபட்டது! இதனை ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு கடுமையாக எதிர்கிறது! என்ற தகவலையும் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் ஆகி வருகிறோம் தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மீனாட்சிபுரம் மத மாற்றம் நிகழ்வு குறித்த திருமாவளவன் ஆய்வை மறுஆய்வு செய்ய ஏபிவிபியைச் சேர்ந்த மாணவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த மாணவர் மூலம் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும் அவர் ஆய்விற்காக மேற்கொண்ட வழிமுறைகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தரவுகளைப் பெற்று அதன் பின் வழக்கு தொடர்ந்து திருமாவளவன் மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை ரத்து செய்யவும் அவருக்கு வழங்கப்பட்ட முனைவர் பட்டத்தை திரும்பப் பெறவும் சட்டத்தின் ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
– இவ்வாறு ஏபிவிபி., நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.விக்னேஷ் தெரிவித்துள்ளார்.